திங்கள், 12 மே, 2008

கோவைப்பழம்





சாலைப்புதூர் பள்ளியில் எங்களுக்கு கிடைத்த தின்பண்டங்கள் குறித்துக் கடந்த பதிவில் சொல்லியிருந்தேன் அல்லவா! இந்தப் பதிவில் முழுக்க முழுக்கப் பட்டிக்காடான காளாஞ்சிபட்டியில் எனக்கு வேறுவிதமான இயற்கைத் தின்பண்டங்கள் கிடைத்தன. அங்கு உள்ள ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளியில் கொஞ்சநாட்கள்தான் படித்தேன். 3ம் வகுப்பு மட்டும்.

அப்போது விதம் விதமான பொருட்கள் எங்களுக்கு தின்னக் கிடைத்தன. அதில் குறிப்பிட வேண்டியது புளியம்பிஞ்சு. பூ பூத்த புளியமரம் ஒரு விதமான மணத்தை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும். அந்தப் பூக்களையும் அப்படியே சாப்பிடலாம். லேசான புளிப்புச்சுவையும் துவர்ப்புச் சுவையும் அடங்கியது புளியம்பூ. சிலருக்குத்தான் அந்தச் சுவை பிடிக்கும்.


ஆனால் அனைவரையும் கவர்வது புளியம்பிஞ்சுதான். சுண்டுவிரலில் கால்பகுதிக்கும் குறைவான மெலிய பிஞ்சுகள் லேசாக உடைத்தாலே உடைந்துவிடும். அவை அட்டகாசமான சுவையுடன் இருக்கும். நறுக் நறுக்கென்று சாப்பிடுவதும் நல்ல அனுபவம்தான். அவற்றைச் சிறிது உப்பு, மிளகாய்ப்பொடியுடன் தொட்டுக்கொண்டு தின்போம். சட்னியின் சுவையோடு இருக்கும். விழுது விழுதாக சட்னி செய்து சாப்பிடுபவர்களும் உண்டு. அவர்கள் திடீரென்று உப்புக்கும் மிளகாய்க்கும் எங்கே செல்வது? அதனால்தான் மதிய உணவு சமைக்கும் அக்கா அல்லது பாட்டியை தாஜா செய்து அவற்றைப் பெற்றுக்கொள்வோம்.

இது தவிர சாதாரண முறுக்குக் கள்ளி மரத்தில் பிரண்டைச் செடிகள் படர்ந்து கிடக்கும். பிரண்டையின் பழம் சுவையாக இருக்கும். சப்பாத்திக்கள்ளி மரத்தில் ஒரு அற்புதமான பழம் இருக்கும். எங்காவது கிராமப்புறங்களில் பேருந்தில் செல்லும்போது வேலிகளில் நீங்கள் பார்த்திருக்கக்கூடும்.

மெலிதான, மிகவும் கூர்மையான முட்கள் அச்செடியில் நிரம்பியிருக்கும். செடிகளும் குட்டையாகத்தான் இருக்கும். கள்ளியின் பக்கவாட்டில் கள்ளிப்பழம் இருக்கும். பார்ப்பதற்கு மலரத் தயாராக இருக்கும் ஒரு ரோஜா மொட்டு போலத் தோற்றமளிக்கும். அதன்மேலும் சிறிய முட்கள் இருக்கும். கையில் குத்திவிட்டால் பிடுங்குவது கடினம். எளிதில் உடைந்துவிடும் என்பதுதான் காரணம்.

கையில் பாய்ந்த முள்ளைப் பிடுங்குவதற்கும் ஒரு தொழில்நுட்பம் இருக்கிறது. ஒரு வழியாக அதனைப் பிடுங்கிவிட்டீர்கள். அடுத்து பழத்தில் உள்ள முட்களை ஒரு பாறாங்கல்லில் வைத்து உரசிவிட வேண்டும். உதிர்ந்துவிடும். அப்புறம் ஊதுங்கள். சுத்தமாகி விட்டதல்லவா?
அதன்பிறகு பழத்தைப் பிய்த்து விடுங்கள். சிவப்பு வண்ணத்தில் சாறு ஒழுகும். உடனடியாக அதனைச்சுவைத்துவிடவேண்டும். நாக்கும் உதடுகளும் லிப்ஸ்டிக் போட்டதுபோல சிவந்துவிடும். பழமும் சுவையாக இருக்கும். பழத்தின் நடுவில் ஒரு முள் உருண்டை வடிவில் இருக்கும். அதனைத் தூக்கி எறிந்துவிடுங்கள். அவ்வளவுதான்.
எங்கள் உதடுகளைச் சிவப்பாக்க கள்ளிப்பழத்தைத்தான் பயன்படுத்துவது வழக்கம்.

கள்ளிப்பழம் போலவே இயற்கை கொடுத்த இன்னொரு வரம் கோவைக்காய். கடைகளில் கிடைக்கும் சமையல் கோவைக்காய் அல்ல இது. வேலியில் படரும் கசப்பான கோவைக்காய். கோவைக் கொடி (தழை) ஆடுகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு. கோவைப்பழம் பழுத்த பிறகு லேசாக வெடிக்கும். அப்போது அதிலிருந்து தேன் ஒழுகும். ஒரு கொடியைக் கண்டுபிடித்தால் 5 அல்லது 6 பழங்களாவது கிடைக்கும். அற்புதமான சுவை கோவைப் பழத்திற்கு. கோவைக்காயை வற்றல் (வத்தல் என்பது கொச்சைத்தமிழ். வெயிலில் வாட வைத்து, வற்ற விட்டு சமைப்பதால் வற்றல் என்று ஆயிற்று) சுவையானது. மருத்துவக் குணம் படைத்தது. நீரிழிவு நோயாளிகளுக்கு நல்ல மருந்து என்று சொல்வார்கள்.

அடுத்த பதிவில் மேலும் சில இயற்கைத் தின்பண்டங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

வியாழன், 8 மே, 2008

சுத்தற முட்டாய், ,பால் ஐஸ்......



கிராமங்களில் உள்ள சிறுவர்களுக்கு பாக்கெட் மணி எனப்படும் கைச்செலவுப் பணம் கிடைப்பது நிரம்பவும் (ரொம்பவே) அரிது. ஒரு 20 ஆண்டுகளுக்கு முன்பு என்ன நிலை இருந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்! நான் சாலைப்புதூர் மற்றும் காளாஞ்சிபட்டி ஆகிய இரண்டு இடங்களில் உள்ள ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளிகளில் படித்தேன் என்று கூறியிருந்தேன் அல்லவா? இந்த இரண்டு ஊர்களுமே 4 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருப்பவைதான். ஆனர்ல் இரண்டுக்கும் தலைகீழ் வித்தியாசங்கள் உண்டு. சாலைப்புதூர் திண்டுக்கல்&பழநி நெடுஞ்சாலையில் அமைந்திருக்கிறது. இதனால் நாகரீகத்தின் சில துளிகள் அங்கும் இங்குமாக சிதறிக் கிடக்கும். அங்கு நான் 3ம் வகுப்புவரை படித்தேன்.
வகுப்பு என்று அழுத்தம் திருத்தமாக நாங்கள் சொன்னதில்லை. 'ஒண்ணாப்பு, ரெண்டாப்பு, மூணாப்பு, நாலாப்பு, அஞ்சாப்பு'&தான். லும். நூநான் பால்வாடியிலிருந்து (பாலர் பள்ளி அல்லது பாலகர் பள்ளி என்பதுதான் தமிழில் சரியான சொற்கள்.) ஒண்ணாப்பு போவதற்கு கஷ்டமே படவில்லை. காரணம், இரண்டும் ஒரே கட்டிடத்தில் இருந்ததுதான். மட்டுமல்லாமல் இரண்டு வகுப்புகளுக்கும் இடையே தடுப்புச் சுவர் எதுவும் கிடையாது.

எனவே பால்வாடியில் எங்களைத் தூங்க வைக்கும்போதே மெல்லக் கிளம்பி ஒன்றாம் வகுப்பு மாணவர்களோடு உட்கார்ந்து கொள்வேன். அங்கு என்ன நடக்கிறது என்று புரியாது என்பதால் ஒரு ஆர்வம். கிளர்ச்சி. சில நேரம் ஒண்ணாப்பு ஆசிரியர் எங்களைக் கண்டுபிடித்துக் களையெடுத்துவிடுவார். 'டேய், நீ பால்வாடியில்ல? அங்க போ!' என்று துரத்திவிடுவார்.

சாலைப்புதூர் பள்ளியில் ஐஸ் விற்பனை படுஜோராக நடக்கும். சாதா ஐஸ், பால் ஐஸ், சேமியா ஐஸ், ஜவ்வரிசி ஐஸ் என்று பல வகைகள் உண்டு. சாதா ஐஸ் விலை 5 பைசா. இதுதான் ஏழைகளின் ஐஸ். பால் ஐஸ் 15 பைசா. சேமியா ஐஸ் 25 பைசா. ஜவ்வரிசி ஐஸ¨ம் அதே விலைதான் என்று நினைக்கிறேன்.

இதில் நாங்கள் ஒரு புதுச்சுவையைக் கண்டுபிடித்தோம். எங்கள் பள்ளியில் சிறிய கமலா ஆரஞ்சுகள் விற்பனையாகும். அதுவும் 5 பைசா, 10 பைசா விலையில்தான் இருக்கும். அதனை வாங்கி இரண்டாக அறுத்து வைத்துக் கொள்வோம். தலையை வானத்தை நோக்கி வைத்துக்கொள்வோம். ஐஸை வாய்க்குள் நுழைத்துக்கொள்வோம். அதன்பிறகு அறுத்து வைத்திருக்கும் ஆரஞ்சுப் பழ மூடியை எடுத்து ஐஸ் மீது பிழிவோம். சுவையான ஆரஞ்சுப் பழச்சாறு வாய்க்குள் செல்லும். எப்படி யோசனை?!

இதுதவிர இலந்தைப் பழ வடை, இலந்தைப் பொடி ஆகியவை வித்தியாசமான சுவைகளில் விற்கப்படும். அதில் சிலருக்கு ஆர்வமுண்டு. 'சுத்தற முட்டாய்' என்று ஒன்று விற்கும். சுற்றுகிற மிட்டாயாம்!. 10 பைசா வடிவில் அந்த மிட்டாய் இருக்கும். அதில் மேலே ஒன்றும் கீழே ஒன்றுமாய் இரண்டு துளைகள் இடப்பட்டிருக்கும். துளைகளின் வழியாக நூல் ஒன்று செல்லும். நூலுக்கு முடிச்சுப் போட்டிருப்பார்கள்.
நூலின் இரு முனைகளைக் கைவிரலில் கோர்த்துக்கொண்டு சுற்றினால் நடுவில் உள்ள மிட்டாய் கிர் கிர் என்று சுற்றும். சத்தமும் பிரமாதமாகக் கேட்கும்.
இதனை இயக்கிக்கொண்டே போய் பெண் பிள்ளைகளின் முடியைக் கத்தரித்துவிடும் குறும்புக்கார மாணவர்களையும் அன்றைய பள்ளிகளில் பார்க்கலாம். முந்தைய பதிவில் நான் சொல்லியிருந்ததால் உங்களுக்கு எள் மிட்டாய் எனப்படும் கடுக்கு மிட்டாய் பரிச்சயமாகியிருக்கும். குருவி, பேருந்து, யானை போன்ற வடிவங்களில் பிஸ்கெட்களும் அன்றைய நாட்களில் கிடைக்கும். அவற்றைத் தவிட்டு ரொட்டி என்றும் குருவி ரொட்டி என்றும் சொல்வோம்.

சீரகத்தின் மேல் இனிப்பு தடவி விற்பனை செய்யப்படும் சீரக மிட்டாய் அன்றிலிருந்து இன்றுவரை பள்ளிக் கூடங்களில் விற்கப்படுகிறது. இவையெல்லாம் செயற்கைத்தின்பண்டங்கள். அடுத்த பதிவில் இயற்கைத் தின்பண்டங்கள் குறித்துப் பார்க்கலாம்.

திங்கள், 5 மே, 2008

காக்கா கடி




கிராமப்புறங்களில் உள்ள அரசுப்பள்ளிகளில் படித்த அனைவருக்கும் காக்கா கடி என்ற சொல் மிகவும் பரிச்சயமானதாகவே இருக்கும். காக்கா கடி என்பது காகம் வந்து கடிப்பதல்ல. காகத்தைப் போலப் பட்டும் படாமலும் கடிப்பதாகும். பள்ளிச்சிறுவர்களில் யாரேனும் ஒருவரிடம் ஒரு உணவுப்பொருள் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த மாணவன் அல்லது மாணவியின் நண்பனோ தோழியோ அருகில் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருக்கும்போது கொடுக்காமல் உண்ண மனசு வராது. முழுவதுமாகக் கொடுக்கவும் மனசு வராது. எனவேதான் இந்த காக்கா கடி என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவார்கள்.

பொதுவாக மிட்டாய், கடலைமிட்டாய், நெல்லிக்காய், கடுக்கு மிட்டாய் (எள் மிட்டாய் அது. கடிக்கும்போது கடுக் என்று சத்தம் வருவதால் அது 'கடுக்'கு மிட்டாய் ஆனது. கடிப்பதற்கும் கடினமாகத்தான் இருக்கும்.) போன்றவைதான் காக்கா கடிக்கு ஆளாகும். தனது உணவுப் பண்டத்தைப் பகிர்ந்து தர விரும்பும் உடைமைதாரர், அதனை தனது சட்டை அல்லது பாவாடையின் ஒரு முனையில் வைத்து அப்பண்டத்தை துணியால் சுற்றி மூடிவிடுவார். அதன்பிறகு லாவகமாக அந்த துணியுடன் இணைந்த உணவுப்பண்டத்தை மெலிதாகக் கடித்து விடுவார். உடனே அது நான்கைந்து துண்டுகளாக உடைந்து விடும். அதன்பிறகு துணியைப் பிரித்து துகள்களைப் பங்கிட்டு நண்பருக்கு அளிப்பார். சிறு சிறு துகள்களாக உடைந்திருக்கும் என்பதால் ஒன்றிரண்டு துகள்களைக் கூடுதலாகவே நண்பர்களுக்கு வழங்கி நல்ல பெயர் எடுத்துக் கொள்பவர்களும் உண்டு. (இதனைத்தான் இங்கிலீஷ்காரன் பிராண்ட் பொசிஷனிங் என்கிறான்.)

இப்படி தாராள மனதுக்காரன் என்ற பெயர் எடுத்தவனுக்கும் சோதனை வருவதுண்டு. லேகோ பின்ன ருசி என்று ஒரு சமஸ்கிருதப் பழமொழி உண்டு. உலகம் பலவிதம் என்பது அதன் பொருள். அதற்கேற்ற மாதிரி நமது நல்ல மனதுக்காரனின் நண்பர்களில் சிலர் தீயவர்களாக இருப்பார்கள். தங்களிடம் உள்ளதைத் தாங்களே தின்றுவிடும் கல்நெஞ்சக்காரர்கள் அவர்கள். அவர்களுக்கு மாணவ சமுதாயம் 'தான் தின்னி' (தானாகத் தின்பவராம்!) என்று பெயர் சூட்டி அவரை சமுதாயத்தின் முன் அவரை அம்பலப்படுத்தும். அந்த அவப்பெயரிலிருந்து தன் பெயரை மீட்டெப்பதற்காக அவரும் சிறு சிறு தானங்கள் செய்வதுண்டு.

தனக்கு வழங்கப்படும் 'கெட்டவன்' பட்டத்தைக் குறித்துக் கொஞ்சமும் கவலைப்படாதவனைப் பார்த்து பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் நல்ல நண்பன் அப்பாவியாகக் கேட்பான் "ஏ....குடுப்பா! நான் உனக்கு அன்னிக்கு கடலை முட்டாய் குடுத்தேன்ல?!''.

அதற்கு கல்நெஞ்ச நண்பன் "போடா, பதிலுக்கு நானும் நெல்லிக்காய் குடுத்துட்டேன்ல!'' என்பான். உடனே நல்லவனுக்குக் கோபம் வந்து சாபமிடுவான். ஒரு கட்டத்தில் "நான் குடுத்த கடலை முட்டாயைக் கக்கு'' என்று சீறுவான். அதாவது வாந்தி எடுத்தாவது அதனைத் திரும்பத் தந்துவிட வேண்டுமாம். இந்த வசனங்கள் காலகாலமாய் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன. ஒருவன்கூட, ஒருத்தி கூட தான் உண்ட தின்பண்டத்தை மேற்கண்ட முறையில் திரும்பத் தர முடிந்ததில்லை.

காக்கா கடி விஷயத்தில் பெண் குழந்தைகள் ரொம்பவே தாராளமாக நடந்துகொள்வார்கள். அவர்களின் ஜியாமெட்ரி பாக்ஸ் (நாங்கள் ஜாமென்ட்ரி பாக்ஸ் என்று அழைப்போம்). அது ஒரு மந்திரப் பெட்டி மாதிரி. ஜியோமெட்ரி கருவிகள் இருக்கிறதோ இல்லையோ அதில் பாதி கடித்த நெல்லிக்காய் ஒன்று நிச்சயம் இருக்கும். அதில் கொஞ்சம் மையும் ஒட்டிக்கொண்டிருக்கும். அதுகுறித்து யாருக்கும் கவலை இருந்ததில்லை.

காக்கா கடிக்கு பெரிய நெல்லிக்காய் மிகவும் வசதியான ஒன்று. எளிதாகக் கடித்துக் கொடுத்துவிடலாம். கடிக்கும்போதே சாறு வாய்க்குள் செல்லும். அது ஒரு போனஸ் மாதிரி. அதனை யாரும் கேள்வி கேட்பதில்லை. காக்கா கடி கடித்துத் தரும்போது அதில் கடித்தவரின் எச்சில் கட்டாயம் இருக்கும். அதுவும் ஒரு பொருட்டல்ல.

அடுத்த பதிவில் கிராமத்திற்கே உரிய சில இயற்கைத் தின்பண்டங்களைப் பற்றிப் பார்ப்போம்.

வியாழன், 1 மே, 2008

ஊ.ஒ.து.பள்ளி





கிராமங்களில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் படித்தவர்களுக்கு என்று சில தனித்துவமான அனுபவங்கள் உண்டு. நானும் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டத்தில் உள்ள காளாஞ்சிபட்டி என்ற கிராமத்திலும் சாலைப்புதூர் என்ற கிராமத்திலும் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்திருக்கிறேன். சென்னையில் தற்போது படித்துவரும் குழந்தைகளைக் கேட்டால் 'நான் பத்மா சேஷாத்ரியில் படிக்கிறேன்' என்றோ, 'டிஏவி&பள்ளியில் படிக்கிறேன்' என்றோ அல்லது கார்ப்பொரேஷன் பள்ளியில் படிக்கிறேன் என்றோ பதில் கூறுவார்கள். ஆனால் மாவட்டங்களில் உள்ள அரசுப்பள்ளி மாணவர்களைக் கேட்டால் அவர்கள் என்ன சொல்வார்கள் தெரியுமா?

"நான் ஊ.ஓ.து.பள்ளியில் படிக்கிறேன்" என்றோ ''ஊ.ஒ.தொ. பள்ளியில் படிக்கிறேன் " என்றோ கூறுவார்கள்.
ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி என்பது அதன் விளக்கம். இப்பள்ளிக்கூடங்களில் உள்ள மதிய உணவுத்திட்டத்தை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் கவனிக்கிறது. இதற்காக சத்துணவு அமைப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பார். அவருக்குக் கீழே சமையல் பணியாளர் இருப்பார். இதுதவிர பள்ளிக் கட்டிடம் கட்டுதல், பராமரிப்பு போன்றவற்றையும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் (ஙிறீஷீநீளீ ஞிமீஸ்மீறீஷீஜீனீமீஸீt ளியீயீவீநீமீ) கவனித்துக்கொள்ளும். அதனால்தான் சாதாரண பள்ளிக் கூடம் ஊ.ஓ. பள்ளியாகிவிடுகிறது.

இப்பள்ளிகளில் கல்வி, சத்துணவு, பாடப்புத்தகங்கள் அனைத்தும் இலவசம். சட்டையோ அல்லது டிரவுசரோ கிழிந்த சிறுவர்கள், பாவாடை கொக்கி பிய்ந்து விழுந்துவிட்டதால் ஹ¨க் கொண்டு சரிசெய்த சிறுமிகளை இங்கு அதிகம் பார்க்கலாம். அதேபோல டிராயரின் பட்டன் உடைந்ததால் அரைஞாண் கயிற்றைக்கொண்டு சமாளிக்கும் சிங்கங்களையும் பார்க்கலாம்.
ஒன்றாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்புக் குழந்தைகள் இயல்பாகவே குழந்தைகளைப் போல நடந்துகொள்வார்கள். 3ம் வகுப்பிலிருந்துதான் அவர்களுக்கு ஒரு பெரிய மனிதர் தோரணையே வரும். சிறிய குழந்தைகளோடு விளையாடத் தயங்குவார்கள்.

அதைவிட முக்கியமான விஷயம், 3ம் வகுப்பில்தான் குழந்தைகளுக்குப் பல் விழுந்து முளைக்கும். அதனால் எந்த ஒரு மூன்றாம் வகுப்பின் வகுப்பறைக்கு நீங்கள் சென்றாலும் அங்கு குறைந்தபட்சம் 10 ஓட்டைப் பல்லன்களையும், பல்லிகளையும் (?) பார்க்கலாம். பல் விழுவதே முக்கியமான ஒரு திருவிழா மாதிரிதான். பல் விழுவதற்கு கொஞ்ச நேரம்வரை அது அப்படியும் இப்படியுமாக ஆடிக்கொண்டிருக்கும். அங்கு முகம்பார்க்கும் கண்ணாடி இருக்காது என்பதால் டிபன் பாக்சின் உள்புறத்தைப் பயன்படுத்தி பல்லின் நடமாட்டத்தை அறிந்துகொள்வார்கள். பிடுங்கலாமா என்று கை பரபரக்கும். ஆனால் அதற்கு ஈறுகள் ஒத்துழைக்காது. சித்ரவதையாக இருக்கும்.

ஒரு வழியாகத் தானாகவே பல் விழுந்துவிடும். உடனடியாக அதனை கையில் எடுத்து வைத்துக்கொள்வார்கள் சிறுவர்கள். உடலிலிருந்து பிரிந்த பொருளாகிவிட்டதால் அந்த அந்நியப்பொருளைக் கைகளில் வைத்துக்கொண்டு ஞானப்பார்வை பார்ப்பதுண்டு. அதன்பின் விபரமறிந்த ஒரு நண்பன் அல்லது நண்பி ஓடிவந்து 'அச்சச்சோ, இப்படியே இதைக் கையில் வைத்திருக்கக்கூடாது. சாணியில் புதைத்து கூரையில் எறி " என்று அறிவுரை கூறுவார்கள். சாணிக்குத் திடீரென்று எங்கே போவது?

எதேச்சையாக ஏதாவது ஒரு எருமைமாடு பள்ளியைக் கடந்து செல்லும்போது சாணி போட்டுவிட்டால் ஓடிச்சென்று எடுத்து வருவார்கள். சாணியை உருட்டி அதற்குள் உடைந்த பல்லைப் புதைத்து கூரை எங்காவது இருக்கிறதா என்று பார்ப்பார்கள். அவர்களின் கெட்ட நேரத்திற்கு அங்கு கூரை வீடே இருக்காது. எப்படியோ ஒரு கூரைவீட்டைக் கண்டுபிடித்து அதன்மீது சாணி உருண்டையை எறிந்துவிடுவார்கள். அப்புறம் ஒரு கூத்து இருக்கிறது. உருட்டி எறிந்த சாணி உருண்டை உருண்டு திரும்பவும் தரையில் விழுந்துவிடும். அப்படி விழுவது மேற்படி பல் விழுந்தவருக்கு எதிரானது. இந்த சம்பவத்தால் அவருக்குப் பல் முளைக்காமல் போய்விடும் விபரீதம் நிகழ்ந்துவிடக்கூடும் என்று பலமாக நம்பப்படுகிறது. கீழே சாணி உருண்டை விழுந்துவிட்டால் அதனைத் திரும்பவும் உருட்டி கூரையில் எறிந்துவிடுவார்கள்.

விருதுநகரிலும் திருவண்ணாமலையிலும் மாணவர்கள் விழுந்த பல்லை மண்ணில் புதைத்து வைத்து விடுவார்களாம்.
பல் விழுந்த கொஞ்ச நாட்களுக்கு நம்மவருக்குப் பல் முளைக்காது. உடனே அவருடைய தாய்க்கு கவலை வந்துவிடும். உடனே பையனின் அல்லது பெண்ணின் தாய்மாமனை அழைத்துக் கொண்டு வருவார்கள். அவர், ஒரு நெல்மணியை எடுத்து அக்குழந்தையின் பல் ஈற்றில் (எகிறு என்பது கொச்சைத்தமிழ்) கீறி விடுவார். அப்புறம் பல் முளைக்கும்.

அரசுப்பள்ளிகளில் இப்போது நல்ல சத்துணவு கிடைக்கிறது என்று நினைக்கிறேன். 1980களில் நிலைமை தலைகீழாக இருந்தது. சத்துணவு சோற்றுக்கே ஒரு தனி மணம். அதாகப்பட்டது கெட்ட வாடை. இருப்பினும் அது எங்களுக்கு கவர்ச்சிகரமாகவே தோன்றும். வரிசையில் நின்று அதனை வாங்கிக்கொள்ள வேண்டும். இதில் அமைப்பை (ஷிஹ்stமீனீ) மீறி குறுக்கே புகுந்து கலவரம் செய்பவர்களும் இருக்கவே செய்வார்கள். சோனிப்பையன்கள் அடி வாங்கிக்கொண்டு வழிவிட வேண்டியதுதான். நான் சோனிப் பையன்கள் சங்கத்தில் முக்கிய உறுப்பினர்.
சத்துணவு சாம்பார் மாதிரி ஒரு திரவத்தை என் வாழ்க்கையில் இதுவரை பார்த்ததில்லை. மஞ்சள் நிறம் மட்டுமே சாம்பார் என்பதற்கான அடையாளம். மற்றபடி அதில் ஒரு ஜீவனும் இருக்காது. எங்காபது கத்தரிக்காய் தோல் கிடைத்தால் அதனைப் பெறும் மாணவன் போன பிறவியில் புண்ணியம் செய்தவனாகத்தான் இருக்க வேண்டும். ஒரு வழியாக உணவைப் பெற்றுக்கொண்ட பிறகு வட்ட வடிவமாக உட்கார்ந்து சாப்பிடுவதே வழக்கம். யாகூ குரூப்ஸ் மற்றும் கூகிள் கம்யூனிட்டி போல இதுவும் ஒத்த கருத்துடையவர்களின் வட்டம்தான். ஒத்துவராதவர்களை வட்டத்திற்குள் சேர்க்க மாட்டார்கள்.

பள்ளி வாழ்க்கையைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் அது நீண்டுகொண்டே போகும். அடுத்த பதிவில் இன்னும் பேசுவோம்!

புதன், 30 ஏப்ரல், 2008

சென்னை எனும் பெருந்தெய்வம்





நண்பர்களே,

இது நிச்சயமாக ஒரு அரதப் பழசான ஒரு புகைப்படம் என்பது பார்த்த மாத்திரத்தில் உங்களுக்குப் புரிந்திருக்கும். ஆனால் இது எந்த கிராமத்தில் எடுத்த புகைப்படம் என்று தெரியுமா? சென்னையேதான்.
ஒரு நாள் நண்பர் ஒருவரின் கணிப்பொறியில் தட்டுப்பட்ட இப்புகைப்படத்தை வாங்கி பத்திரமாக சேமித்து வைத்துக்கொண்டேன்.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.......... இந்த சென்னைப் பட்டணம் கிராமமாக இருந்தபோது அதன் வடிவம் எப்படி இருந்திருக்கும்? என்னென்ன மாதிரியான தொழில்கள் புழங்கியிருக்கும்?.......அன்றைய மக்கள் எவ்விதம் உடுத்தியிருந்திருப்பார்கள்? அவர்களின் பேச்சு வழக்கு மொழி எப்படி இருந்திருக்கும்? கணிக்கவே கடினமாக இருக்கிறதல்லவா? கடினம்தான். காரணம் இருக்கிறது.

மாநிலத்தின் அனைத்துப் பகுதி மக்களுக்கும் வாழ்க்கை தரும் நம்பிக்கைக் கீற்றாக சென்னைப் பட்டணம் (சென்னப் பட்டணம் என்பதே சரி.) அன்றிலிருந்து இன்றுவரை இருக்கிறது. கெட்டும் பட்டணம் போய்ச் சேர் என்ற பழமொழிகூட அதனை ஒட்டி வந்ததுதான். இப்படி பொருளாதார வாழ்க்கையில் கெட்டுப்போனவர்கள் இறுதிப்புகலிடமான இப்பட்டணத்திற்கு வந்து குவியக் குவிய சென்னப்பட்டணம் மதராஸ் என்ற கம்பீரப் பெயருடன் நிமிர்ந்து நிற்க ஆரம்பித்துவிட்டது.
சென்னைக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்த அனைத்து கிராமங்களும் நாகரீகத்தின் பெயரால் அழிக்கப்பட்டு விட்டன. அற்புதமான கூவம் நதி இன்று சாக்கடைக் கால்வாயாக மாற்றப்பட்டு விட்டது. (ஒரு விஷயம் தெரியுமா? பச்சையப்பன் கல்லூரி உருவாகக் காரணமான பச்சையப்ப முதலியார் கூவம் நதியில் குளித்த பிறகே தினசரி வேலைகளை ஆரம்பிப்பாராம்). சென்னை மக்கள் பேசி வந்த மொழி கொச்சைத்தமிழ் என்று இன்றளவும் நம்மால் கேலி செய்யப்படுகிறது.

கள்ளங்கபடமற்ற சென்னை கிராம மக்கள் இங்கு எங்கு வாழ்கிறார்கள் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா? எனக்குத் தெரிந்தவரை சென்னையின் பூர்வகுடிகள் கூவம் நதியின் ஓரங்களில் குடிசைபோட்டு வாழ்பவர்கள்தான் என்பது எனது திடமான நம்பிக்கை.

அவர்கள்தான் சென்னையின் மொழியில் பேசுகிறார்கள். அந்த முரட்டு மொழியின் பின்னணயில் கள்ளங்கபடமற்ற தன்மை தெரிகிறது. எளிதில் இளகிவிடும் மனது படைத்தவர்கள் அவர்கள். இன்னும் ரிக்ஷா ஓட்டிக்கொண்டும் மூட்டை தூக்கிக்கொண்டும், மீன் பிடித்துக்கொண்டும் உடல் உழைப்பையே நம்பி வாழும் அவர்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இங்கு வாழ்ந்துகொண்டிருக்கும் வந்தேறிகளாகிய நாம் செய்யவேண்டிய நன்றிக் கடன் நிறைய இருக்கிறது.

பழைய சென்னையின் புகைப்படங்கள் நம்மை ஏதேதோ உலகத்திற்குக் கொண்டு செல்கின்றன.

சரி. அடுத்தமுறை ரிக்ஷாக்காரரோ, மீன்பிடித் தொழிலாளியோ, துப்புரவுப் பணி செய்பவரோ "இன்னாபா, ஒத்துபா! அப்டிக்கா போணும்." என்றோ, ''பேமானி, கஸ்மாலம்" என்றோ, ''இஸ்துகினு'' , ''வலிச்சுகினு'' என்றோ ஒரு உரையாடலை எதிர்கொள்ள நேர்ந்தால் அத்திசையை நோக்கி வணங்குங்கள். அவர்கள் விரல்களுக்கு முத்தமிடுங்கள்.

நாம் நடப்பதும் தூங்குவதும் பணிபுரிவதும் அவர்களின் நிலத்தில்தான்.நமது நாகரீகத்தமிழ் இங்கு வளர்ந்தது அவர்களின் மொழியைக் கொன்றுதான். நாம் வாழும் வீடுகள் அவர்களின் குடிசைகள் இருந்த இடத்தின் மேல்தான் கட்டப்பட்டிருக்கின்றன. அவற்றை ஒரு நொடி யோசித்துப் பாருங்கள். கூவம் என்னும் புண்ணிய நதியின் தீர்த்தத்தைத் தொட்டு கண்ணில் ஒற்றிக் கொள்ளுங்கள். சென்னை என்னும் பெருந்தெய்வம் உங்களையும் தன் மகனாகவோ மகளாகவோ எண்ணித் தன் மடியில் அமர்த்திக் கொள்ளும்.

பழைய சென்னை குறித்துப் பேச நிறைய விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. அடுத்தடுத்த பதிவுகளில் அவற்றைப் பற்றிப் பேசுவோம்.

திங்கள், 28 ஏப்ரல், 2008

சுடுகுஞ்சு




கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு படித்த ஒரு செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். எனது மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய எழுத்தாளர் திரு. மேலாண்மை பொன்னுச்சாமி அவர்களின் நூலில் கிடைத்த செய்தி அது. அநேககமாக 'சிறுகதைப் படைப்பின் உள்விவகாரம்' என்ற நூலாகத்தான் இருக்கும் என்று கருதுகிறேன். வேறு புத்தகமாகவும் இருக்கலாம்.

அதில் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி ஒரு அற்புதமான செய்தியைக் கூறுகிறார். அதாவது தென்மாவட்டங்களில் குறிப்பாக மதுரைக்கும் தெற்கே உள்ள மாவட்டங்களில் ஒரு சொல்லாடல் உண்டு. யாருமே இல்லாத கிராமத்துத் தெரு 'வெறிச்' என்று இருந்தது என்று இப்போதெல்லாம் எழுதுகிறோமே, அதற்கு மாற்றாக பொருள் நயமும் சொல் நயமும் மிக்க வாக்கியத்தை அம்மக்கள் பயன்படுத்துகிறார்கள். கடுமையான வெயில். சாலையில் கால் வைக்க முடியவில்லை. அதனாலும், வேலைக் காட்டிற்கு அவரவர் சென்று விட்டதாலும் கிராமமே வெறிச்சோடிக் கிடக்கிறது.
இதனை தென் மாவட்ட மக்கள் ' தெருவிலே ஒரு சுடுகுஞ்சைக் கூட காணோம்' என்று குறிப்பிடுகிறார்கள். சுடுகுஞ்சு என்பது கோழிக்குஞ்சு. கிராமம் என்றால் கோழி,
ஆடு, மாடு இல்லாமலா? சரி. கோழிக்குஞ்சு என்று சொல்லிவிட்டுப் போக வேண்டியதுதானே! அது என்ன சுடுகுஞ்சு?
அடைகாக்கப்பட்ட முட்டையிலிருந்து பொரித்து வெளிவரும் கோழிக்குஞ்சு இளஞ்சூடாக இருக்கும். பிறந்தஉடனேயே அங்கு ஒடுவதும் இங்கு ஓடுவதுமாக இருக்கும். அதனைத் தாய்க்கோழி கண்டித்து தனது இறக்கைக்குள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும். அதனால் கோழிக்குஞ்சின் வெப்பம் இன்னும் அதிகமாகவே இருக்கும். அவ்வாறு துடுக்குத்தனமும் அழகும் நிறைந்த பயமறியாத சுடு கோழிக்குஞ்சுகூட அந்த மதிய வெயிலில் தெருவில் கால்வைக்க யோசிக்குமாம். எதற்கு வம்பு என்று தாயுடன் ஐக்கியமாகிவிடுமாம். இதுதான் சுடுகுஞ்சின் கதை. எப்படி இருக்கிறது?

குறிப்பு: மேலாண்மை பொன்னுச்சாமி என்றால் அவர் என்னவோ வார்ட்டன், கெல்லாக் போன்ற சர்வதேச தரம் வாய்ந்த மேலாண்மை நிறுவனங்களில் எம்.பி.ஏ. படித்தவர் என்று புரிந்துகொள்ள வேண்டாம். குறைவான பள்ளிப்படிப்பு அனுபவம் கொண்டவர் அவர். மேலாண்மறைநாடு என்பது அவரது கிராமத்தின் பெயர். படிப்பில் குறை இருந்தாலும் முற்போக்கான எழுத்துக்களில் அவரது மேலாண்மை சற்று கெட்டிதான். வாய்ப்பு கிடைத்தால் அவரது நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகளைப் படித்துப் பாருங்கள். அவரது 'சிறுகதைப்படைப்பின் உள்விவகாரம் ' என்னும் நூல் வளரும் எழுத்தாளர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டி என்று சொல்லலாம்.

சனி, 26 ஏப்ரல், 2008


இணைய நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். கடந்த வாரம் எனக்கு குழந்தை பிறந்திருக்கிறது. எங்களின் எதிர்பார்ப்பைப் பொய்யாக்காத வகையில் பெண் குழந்தை பிறந்திருப்பது அனைவரையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இந்த மகிழ்ச்சியை அனைத்து நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஜோசிய, ஜாதக வல்லுநர்களுக்கு வேலை வைக்காமல் குழந்தைக்குப் பெயரும் சூட்டி விட்டோம். தூரிகை என்பது பெயர். நல்லது.

குழந்தைப் பிறப்பை ஒட்டி எனக்கு கிடைத்த ஒரு தகவலை இன்று பகிர்ந்துகொள்கிறேன்.
எனது குழந்தை பிறந்த மூன்றாம் நாளன்று அதனைத் தூங்க வைப்பதற்காக தொட்டில் கட்டினோம். குழந்தையைத் தொட்டிலில் போடுவதற்கு முன்பு திசைகளைச் சரிபார்த்துக்கொண்டார்கள்.
மேற்கு கிழக்காகப் படுக்க வைத்து குழந்தையைத் தூங்க வைத்தோம். இது சாதாரணமாகப் பார்ப்பதற்கு மூடநம்பிக்கை போலத் தெரிந்தாலும் இதிலும் ஒரு அறிவியல் இருக்கிறது. பொதுவாக வடக்கு திசையில் தலை வைத்துப் படுக்காதே என்று கிராமத்தில் பெரியவர்கள் கூறுவார்கள். காரணம், மின் காந்தக் கதிர்கள் தெற்கு வடக்காகத்தான் பயணிக்குமாம். இது நமது தூக்கத்தையும், கனவுகளையும் பாதிக்கும் என்று ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன். அதனால்தான் கிழக்கு மேற்காகப் படுத்து உறங்கச் சொல்கிறார்கள்.
அதேபோல எனது குழந்தையைத் தொட்டிலில் போடுவதற்கு முன்பு அம்மிக் குழவி ஒன்றைப் போட்டு முன்னும்பின்னுமாக மூன்று முறை ஆட்டினார்கள் பெரியவர்கள். அதுவும் ஒரு சம்பிரதாயம்தானாம். ஆனால் அதில் உள்ள காரணம் எளிதில் அறிந்துகொள்ள முடிகிற ஒரு விஷயம்தான்.
தொட்டில் பொதுவாக நூல் சேலையில்தான் கட்டப்படும். தற்போது நவீன தொட்டில்களில் கிளிப்கள் வைத்து, கொக்கிகள் வைத்து அமைக்கிறார்கள். எனவே பாதுகாப்புக்கும் பங்கமில்லை. பழைய தொட்டில் முறையில் வீட்டு உத்திரத்தில் சேலையைப் போட்டு அதில் முடிச்சுப் போட்டு குழந்தையை அதில் படுக்க வைப்பார்கள். கிராமத்தில் இன்னும் அதே முறை பின்பற்றப்படுகிறது. அவ்வாறு சேலையில் முடிச்சுப்போடும்போது அது அவிழ்ந்து விடுகிறதா அல்லது முடிச்சு பலமாக இருக்கிறதா என்று பார்ப்பதற்குத்தான் அம்மிக்குழவியைத் தொட்டிலில் போட்டு ஆட்டிப் பார்க்கிறார்கள்.
அதேபோல சேலையின் முடிச்சு கைக்கு எட்டும் உயரத்தில் இருக்குமாறும் பார்த்துக்கொள்கிறார்கள். இதனால் முடிச்சு பலமாக இருக்கிறதா, தளர்ந்துவிட்டதா என்று சரிபார்த்துக் கொள்ளலாமாம். என்ன நுணுக்கம் பாருங்கள்!

(குறிப்பு: படத்தில் காண்பது தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த அழகு மிகுந்த ஒரு கருப்பினக் குழந்தையை.! விரைவில் இதே இடத்தில் எனது குழந்தையின் புகைப்படம் இடம்பெறும்.

நிற்க.

குழந்தைகள் என்றாலே கொள்ளை அழகுதான். அதிலும் கருப்பினக்குழந்தைகள் இன்னும் அழகு. வெள்ளையர் ஒருவருக்கும் கருப்பினத்தவர் ஒருவருக்கும் பிறந்த குழந்தைகள் இன்னும் அற்புதம். ஏறத்தாழ இந்தியாவில் பிறந்த குழந்தை போலவே இருப்பதைக் காணமுடியும். இந்தப் பாசத்திற்கு ஆப்பிரிக்கக் கண்டத்திற்கும் நமக்கும் உள்ள ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய விட்ட குறை தொட்ட குறை உறவும் காரணமாக இருக்கலாம்)

ஞாயிறு, 13 ஏப்ரல், 2008

புகுமுன்............................

தமிழர்களின் அடையாளம் என்பதே கிராமங்கள்தாம், திரைகடல் ஓடியும் திரவியம் தேடிப் போனவர்களும் தங்கள் கிராமம் குறித்து தொலைக்காட்சியில் ஏதேனும் காட்சி இடடம்பெறும்போதோ அல்லது செய்தியைப் படிக்கும்போதோ இதயத்தின் அடிப்பகுதியை இனம்புரியாத கரங்கள் மென்மையாக வருடுவதை உணர முடியும், இந்த உணர்வுகளால் இணைக்கப்பட்ட ஒரு வலைதான் இன்றளவும் கிராமங்களின் புனிதத்தன்மையையும் யதார்த்தத்தையும் இந்த நவீன யுகத்திலும் உயிர்ப்பித்து வைத்திருக்கிறது,
வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு மேலே சொன்ன கருத்து பொருந்தும் என்றhல் இந்தியாவின் வௌ;வேறு நகரங்களில் பிழைப்பு தேடிச்சென்று ஆங்காங்கே வாழ்ந்துகொண்டிருப்பவர்களுக்கு வேறெhரு விதமான வேதனை. நம் கண்ணெதிரே நமது கிராமங்கள் முன்னேறி வருவதை வெறுமனே பார்த்துக்கொண்டு மட்டுமே இருக்க முடிகிற வேதனை அவர்களுக்கு. கிராமத்தின் எளிமை. அன்பு. கரிசனம். உறவுகளோடு தங்களைப் பிணைத்துக்கொண்டு கிராமத்தின் வளர்ச்சியுடன் சேர்ந்தே வளர முடியாமல் போய்விட்டதே என்ற ஆதங்கம் ஒருபுறம்,
அதேபோல நமது சொந்த கிராமங்களுக்குச் செல்லும்போது தற்போது நகர்ப்புறங்களில் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கும் நவீன வசதிகள். அத்தியாவசியமாகிவிட்ட ஆடம்பரங்கள். நியாயமான அடிப்படை வசதிகள். முன்னேற்றத்திற்குப் பயன்படும் முற்போக்கான மனப்பாங்கு ஆகியவற்றை கிராமங்களில் தேடி ஏமாற்றமடைய வேண்டியதாக உள்ளது, இரண்டுங்கெட்டானாக திரும்பவும் நகரங்களின் கான்கிரீட் காடுகளை நோக்கி கனத்த இதயத்தோடு பேருந்திலோ. விமானத்திலோ. ரயிலிலோ ஏறி உட்கார்ந்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது, இதுதான் இன்னொரு வேதனை,
இது இப்படி இருந்தாலும் நகர்ப்புறங்களில் எதிர்காலத்தில் ;பிறக்க இருக்கும் குழந்தைகளுக்கும் தற்போது வளர்ந்து ஆளாகியிருக்கும் இன்றைய இளையதலைமுறைக்கும் நமது வேர்களைக் குறித்த விபரங்கள் தெரியாமல் போய்விட வாய்ப்பு இருக்கிறது, இந்த வரலாற்றுத்தவறைத்தொடர நாம் அனுமதித்து விடக்கூடாது. எனவேதான் நமது கிராமங்களின் வாழ்க்கை. சடங்குகள். நம்பிக்கைகள். மு்டநம்பிக்கைகள். பழக்கவழக்கங்கள். பழமொழிகள். திருமண முறைகள். தொழில் உட்பட பல்வேறு அம்சங்களையும் எனக்குத் தெரிந்தவரை. தெரிந்தவகையில் முடிந்தவரை இந்த வலைப்பூவில் இடம்பெறச் செய்ய உள்ளேன், தமிழ்கூறு நல்லுலகு இந்த முயற்சிக்கு ஆதரவு தர வேண்டுகிறேன், இதில் இடம்பெறும் படைப்புகள் குறித்து உங்களின் கருத்துக்கள். செய்திகளை அறியத்தாருங்கள்,
என்றென்றும அன்புடன்;.
கா.சு.துரையரசு

செவ்வாய், 1 ஏப்ரல், 2008

vanakkam

நண்பர்களே...
நான் கா.சு.துரையரசு. பத்திரிகையாளர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள காளாஞ்சிபட்டி என்ற குக்கிராமத்தில் பிறந்தவன். இன்று நகரவாசியாக இருந்தாலும் நான் புழங்கிய கிராம வாழ்க்கை இன்னும் நெஞ்சுக்குள்ளேயே பசுமையாக இருக்கிறது. அதனைப் பகிர்வதற்கென்றே இந்த வலைப்பூ...

சமூகம் மாறவேண்டுமானால், சமூகவியலும் மாறவேண்டும்!

  நான் சமூகவியலில் முதுகலைப்பட்டப் படிப்பை அண்மையில் படித்து நிறைவு செய்தததை நண்பர்கள் அறிவீர்கள். எனது தமிழ்நாடு திறந்த நிலைப்பல்கலைக் கழகம...