தலையில்லாத முண்டம்
அநேகமாக நான் 3 அல்லது 4 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த நேரமது. சாலைப்புதூரில் இருந்து பக்கத்து ஊரான காளாஞ்சிபட்டிக்கு தாத்தாவின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். (அதுதான் எனது சொந்த ஊரும்கூட). ஒரு மதிய வேளை. ஊரே ஒரே அல்லோலகல்லோகலமாக இருந்தது. எல்லோர் முகத்திலும் பீதி. ஊரின் நடுவில் இருந்த வேப்பமரத்தின் தழைகளை ஆளாளுக்கு பறித்துக்கொண்டிருந்தனர். சிலர் கிளைகளையே முறித்துக்கொண்டு ஓடினர். எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன நடக்கிறது என்று கேட்டேன். “உனக்குத் தெரியாதா? நம்ம ஊருக்குப் பேய் வரப்போகுதாம்” “பேயா?” ”பேய்கூட இல்ல...தலை இல்லாத முண்டம் வரப்போகுதாம். அதுக்காகத்தான் எல்லாரும் வேப்பந்தழைய ஒடிச்சு வீட்ல எரவாரத்துல (முகப்பில்) சொருகி வைக்கிறோம். உங்க வீட்டுக்கு நீ ஒடிச்சுட்டுப்போகலையா?” “இல்லையே!” “அப்படின்னா யார்கிட்டயாவது ரெண்டு தழ வாங்கிக்கிட்டுபோ...உங்க தாத்தா வீட்ல வைக்கணும்ல” “சரி சரி...தலை இல்லாத முண்டம் என்ன பண்ணுமாம்?” “அது வந்து கதவத் தட்டும். குடிக்கத் தண்ணி கேக்கும். நாம கதவ தெறக்க்ககூடாது. தெறந்தா நாம ஒடனே செத்துப்போயிருவோம்” எனக்கு பாதி உயிர் போய்விட்டது. ”அப்போ என்