புதன், 30 ஏப்ரல், 2008

சென்னை எனும் பெருந்தெய்வம்





நண்பர்களே,

இது நிச்சயமாக ஒரு அரதப் பழசான ஒரு புகைப்படம் என்பது பார்த்த மாத்திரத்தில் உங்களுக்குப் புரிந்திருக்கும். ஆனால் இது எந்த கிராமத்தில் எடுத்த புகைப்படம் என்று தெரியுமா? சென்னையேதான்.
ஒரு நாள் நண்பர் ஒருவரின் கணிப்பொறியில் தட்டுப்பட்ட இப்புகைப்படத்தை வாங்கி பத்திரமாக சேமித்து வைத்துக்கொண்டேன்.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.......... இந்த சென்னைப் பட்டணம் கிராமமாக இருந்தபோது அதன் வடிவம் எப்படி இருந்திருக்கும்? என்னென்ன மாதிரியான தொழில்கள் புழங்கியிருக்கும்?.......அன்றைய மக்கள் எவ்விதம் உடுத்தியிருந்திருப்பார்கள்? அவர்களின் பேச்சு வழக்கு மொழி எப்படி இருந்திருக்கும்? கணிக்கவே கடினமாக இருக்கிறதல்லவா? கடினம்தான். காரணம் இருக்கிறது.

மாநிலத்தின் அனைத்துப் பகுதி மக்களுக்கும் வாழ்க்கை தரும் நம்பிக்கைக் கீற்றாக சென்னைப் பட்டணம் (சென்னப் பட்டணம் என்பதே சரி.) அன்றிலிருந்து இன்றுவரை இருக்கிறது. கெட்டும் பட்டணம் போய்ச் சேர் என்ற பழமொழிகூட அதனை ஒட்டி வந்ததுதான். இப்படி பொருளாதார வாழ்க்கையில் கெட்டுப்போனவர்கள் இறுதிப்புகலிடமான இப்பட்டணத்திற்கு வந்து குவியக் குவிய சென்னப்பட்டணம் மதராஸ் என்ற கம்பீரப் பெயருடன் நிமிர்ந்து நிற்க ஆரம்பித்துவிட்டது.
சென்னைக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்த அனைத்து கிராமங்களும் நாகரீகத்தின் பெயரால் அழிக்கப்பட்டு விட்டன. அற்புதமான கூவம் நதி இன்று சாக்கடைக் கால்வாயாக மாற்றப்பட்டு விட்டது. (ஒரு விஷயம் தெரியுமா? பச்சையப்பன் கல்லூரி உருவாகக் காரணமான பச்சையப்ப முதலியார் கூவம் நதியில் குளித்த பிறகே தினசரி வேலைகளை ஆரம்பிப்பாராம்). சென்னை மக்கள் பேசி வந்த மொழி கொச்சைத்தமிழ் என்று இன்றளவும் நம்மால் கேலி செய்யப்படுகிறது.

கள்ளங்கபடமற்ற சென்னை கிராம மக்கள் இங்கு எங்கு வாழ்கிறார்கள் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா? எனக்குத் தெரிந்தவரை சென்னையின் பூர்வகுடிகள் கூவம் நதியின் ஓரங்களில் குடிசைபோட்டு வாழ்பவர்கள்தான் என்பது எனது திடமான நம்பிக்கை.

அவர்கள்தான் சென்னையின் மொழியில் பேசுகிறார்கள். அந்த முரட்டு மொழியின் பின்னணயில் கள்ளங்கபடமற்ற தன்மை தெரிகிறது. எளிதில் இளகிவிடும் மனது படைத்தவர்கள் அவர்கள். இன்னும் ரிக்ஷா ஓட்டிக்கொண்டும் மூட்டை தூக்கிக்கொண்டும், மீன் பிடித்துக்கொண்டும் உடல் உழைப்பையே நம்பி வாழும் அவர்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இங்கு வாழ்ந்துகொண்டிருக்கும் வந்தேறிகளாகிய நாம் செய்யவேண்டிய நன்றிக் கடன் நிறைய இருக்கிறது.

பழைய சென்னையின் புகைப்படங்கள் நம்மை ஏதேதோ உலகத்திற்குக் கொண்டு செல்கின்றன.

சரி. அடுத்தமுறை ரிக்ஷாக்காரரோ, மீன்பிடித் தொழிலாளியோ, துப்புரவுப் பணி செய்பவரோ "இன்னாபா, ஒத்துபா! அப்டிக்கா போணும்." என்றோ, ''பேமானி, கஸ்மாலம்" என்றோ, ''இஸ்துகினு'' , ''வலிச்சுகினு'' என்றோ ஒரு உரையாடலை எதிர்கொள்ள நேர்ந்தால் அத்திசையை நோக்கி வணங்குங்கள். அவர்கள் விரல்களுக்கு முத்தமிடுங்கள்.

நாம் நடப்பதும் தூங்குவதும் பணிபுரிவதும் அவர்களின் நிலத்தில்தான்.நமது நாகரீகத்தமிழ் இங்கு வளர்ந்தது அவர்களின் மொழியைக் கொன்றுதான். நாம் வாழும் வீடுகள் அவர்களின் குடிசைகள் இருந்த இடத்தின் மேல்தான் கட்டப்பட்டிருக்கின்றன. அவற்றை ஒரு நொடி யோசித்துப் பாருங்கள். கூவம் என்னும் புண்ணிய நதியின் தீர்த்தத்தைத் தொட்டு கண்ணில் ஒற்றிக் கொள்ளுங்கள். சென்னை என்னும் பெருந்தெய்வம் உங்களையும் தன் மகனாகவோ மகளாகவோ எண்ணித் தன் மடியில் அமர்த்திக் கொள்ளும்.

பழைய சென்னை குறித்துப் பேச நிறைய விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. அடுத்தடுத்த பதிவுகளில் அவற்றைப் பற்றிப் பேசுவோம்.

திங்கள், 28 ஏப்ரல், 2008

சுடுகுஞ்சு




கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு படித்த ஒரு செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். எனது மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய எழுத்தாளர் திரு. மேலாண்மை பொன்னுச்சாமி அவர்களின் நூலில் கிடைத்த செய்தி அது. அநேககமாக 'சிறுகதைப் படைப்பின் உள்விவகாரம்' என்ற நூலாகத்தான் இருக்கும் என்று கருதுகிறேன். வேறு புத்தகமாகவும் இருக்கலாம்.

அதில் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி ஒரு அற்புதமான செய்தியைக் கூறுகிறார். அதாவது தென்மாவட்டங்களில் குறிப்பாக மதுரைக்கும் தெற்கே உள்ள மாவட்டங்களில் ஒரு சொல்லாடல் உண்டு. யாருமே இல்லாத கிராமத்துத் தெரு 'வெறிச்' என்று இருந்தது என்று இப்போதெல்லாம் எழுதுகிறோமே, அதற்கு மாற்றாக பொருள் நயமும் சொல் நயமும் மிக்க வாக்கியத்தை அம்மக்கள் பயன்படுத்துகிறார்கள். கடுமையான வெயில். சாலையில் கால் வைக்க முடியவில்லை. அதனாலும், வேலைக் காட்டிற்கு அவரவர் சென்று விட்டதாலும் கிராமமே வெறிச்சோடிக் கிடக்கிறது.
இதனை தென் மாவட்ட மக்கள் ' தெருவிலே ஒரு சுடுகுஞ்சைக் கூட காணோம்' என்று குறிப்பிடுகிறார்கள். சுடுகுஞ்சு என்பது கோழிக்குஞ்சு. கிராமம் என்றால் கோழி,
ஆடு, மாடு இல்லாமலா? சரி. கோழிக்குஞ்சு என்று சொல்லிவிட்டுப் போக வேண்டியதுதானே! அது என்ன சுடுகுஞ்சு?
அடைகாக்கப்பட்ட முட்டையிலிருந்து பொரித்து வெளிவரும் கோழிக்குஞ்சு இளஞ்சூடாக இருக்கும். பிறந்தஉடனேயே அங்கு ஒடுவதும் இங்கு ஓடுவதுமாக இருக்கும். அதனைத் தாய்க்கோழி கண்டித்து தனது இறக்கைக்குள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும். அதனால் கோழிக்குஞ்சின் வெப்பம் இன்னும் அதிகமாகவே இருக்கும். அவ்வாறு துடுக்குத்தனமும் அழகும் நிறைந்த பயமறியாத சுடு கோழிக்குஞ்சுகூட அந்த மதிய வெயிலில் தெருவில் கால்வைக்க யோசிக்குமாம். எதற்கு வம்பு என்று தாயுடன் ஐக்கியமாகிவிடுமாம். இதுதான் சுடுகுஞ்சின் கதை. எப்படி இருக்கிறது?

குறிப்பு: மேலாண்மை பொன்னுச்சாமி என்றால் அவர் என்னவோ வார்ட்டன், கெல்லாக் போன்ற சர்வதேச தரம் வாய்ந்த மேலாண்மை நிறுவனங்களில் எம்.பி.ஏ. படித்தவர் என்று புரிந்துகொள்ள வேண்டாம். குறைவான பள்ளிப்படிப்பு அனுபவம் கொண்டவர் அவர். மேலாண்மறைநாடு என்பது அவரது கிராமத்தின் பெயர். படிப்பில் குறை இருந்தாலும் முற்போக்கான எழுத்துக்களில் அவரது மேலாண்மை சற்று கெட்டிதான். வாய்ப்பு கிடைத்தால் அவரது நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகளைப் படித்துப் பாருங்கள். அவரது 'சிறுகதைப்படைப்பின் உள்விவகாரம் ' என்னும் நூல் வளரும் எழுத்தாளர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டி என்று சொல்லலாம்.

சனி, 26 ஏப்ரல், 2008


இணைய நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். கடந்த வாரம் எனக்கு குழந்தை பிறந்திருக்கிறது. எங்களின் எதிர்பார்ப்பைப் பொய்யாக்காத வகையில் பெண் குழந்தை பிறந்திருப்பது அனைவரையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இந்த மகிழ்ச்சியை அனைத்து நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஜோசிய, ஜாதக வல்லுநர்களுக்கு வேலை வைக்காமல் குழந்தைக்குப் பெயரும் சூட்டி விட்டோம். தூரிகை என்பது பெயர். நல்லது.

குழந்தைப் பிறப்பை ஒட்டி எனக்கு கிடைத்த ஒரு தகவலை இன்று பகிர்ந்துகொள்கிறேன்.
எனது குழந்தை பிறந்த மூன்றாம் நாளன்று அதனைத் தூங்க வைப்பதற்காக தொட்டில் கட்டினோம். குழந்தையைத் தொட்டிலில் போடுவதற்கு முன்பு திசைகளைச் சரிபார்த்துக்கொண்டார்கள்.
மேற்கு கிழக்காகப் படுக்க வைத்து குழந்தையைத் தூங்க வைத்தோம். இது சாதாரணமாகப் பார்ப்பதற்கு மூடநம்பிக்கை போலத் தெரிந்தாலும் இதிலும் ஒரு அறிவியல் இருக்கிறது. பொதுவாக வடக்கு திசையில் தலை வைத்துப் படுக்காதே என்று கிராமத்தில் பெரியவர்கள் கூறுவார்கள். காரணம், மின் காந்தக் கதிர்கள் தெற்கு வடக்காகத்தான் பயணிக்குமாம். இது நமது தூக்கத்தையும், கனவுகளையும் பாதிக்கும் என்று ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன். அதனால்தான் கிழக்கு மேற்காகப் படுத்து உறங்கச் சொல்கிறார்கள்.
அதேபோல எனது குழந்தையைத் தொட்டிலில் போடுவதற்கு முன்பு அம்மிக் குழவி ஒன்றைப் போட்டு முன்னும்பின்னுமாக மூன்று முறை ஆட்டினார்கள் பெரியவர்கள். அதுவும் ஒரு சம்பிரதாயம்தானாம். ஆனால் அதில் உள்ள காரணம் எளிதில் அறிந்துகொள்ள முடிகிற ஒரு விஷயம்தான்.
தொட்டில் பொதுவாக நூல் சேலையில்தான் கட்டப்படும். தற்போது நவீன தொட்டில்களில் கிளிப்கள் வைத்து, கொக்கிகள் வைத்து அமைக்கிறார்கள். எனவே பாதுகாப்புக்கும் பங்கமில்லை. பழைய தொட்டில் முறையில் வீட்டு உத்திரத்தில் சேலையைப் போட்டு அதில் முடிச்சுப் போட்டு குழந்தையை அதில் படுக்க வைப்பார்கள். கிராமத்தில் இன்னும் அதே முறை பின்பற்றப்படுகிறது. அவ்வாறு சேலையில் முடிச்சுப்போடும்போது அது அவிழ்ந்து விடுகிறதா அல்லது முடிச்சு பலமாக இருக்கிறதா என்று பார்ப்பதற்குத்தான் அம்மிக்குழவியைத் தொட்டிலில் போட்டு ஆட்டிப் பார்க்கிறார்கள்.
அதேபோல சேலையின் முடிச்சு கைக்கு எட்டும் உயரத்தில் இருக்குமாறும் பார்த்துக்கொள்கிறார்கள். இதனால் முடிச்சு பலமாக இருக்கிறதா, தளர்ந்துவிட்டதா என்று சரிபார்த்துக் கொள்ளலாமாம். என்ன நுணுக்கம் பாருங்கள்!

(குறிப்பு: படத்தில் காண்பது தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த அழகு மிகுந்த ஒரு கருப்பினக் குழந்தையை.! விரைவில் இதே இடத்தில் எனது குழந்தையின் புகைப்படம் இடம்பெறும்.

நிற்க.

குழந்தைகள் என்றாலே கொள்ளை அழகுதான். அதிலும் கருப்பினக்குழந்தைகள் இன்னும் அழகு. வெள்ளையர் ஒருவருக்கும் கருப்பினத்தவர் ஒருவருக்கும் பிறந்த குழந்தைகள் இன்னும் அற்புதம். ஏறத்தாழ இந்தியாவில் பிறந்த குழந்தை போலவே இருப்பதைக் காணமுடியும். இந்தப் பாசத்திற்கு ஆப்பிரிக்கக் கண்டத்திற்கும் நமக்கும் உள்ள ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய விட்ட குறை தொட்ட குறை உறவும் காரணமாக இருக்கலாம்)

ஞாயிறு, 13 ஏப்ரல், 2008

புகுமுன்............................

தமிழர்களின் அடையாளம் என்பதே கிராமங்கள்தாம், திரைகடல் ஓடியும் திரவியம் தேடிப் போனவர்களும் தங்கள் கிராமம் குறித்து தொலைக்காட்சியில் ஏதேனும் காட்சி இடடம்பெறும்போதோ அல்லது செய்தியைப் படிக்கும்போதோ இதயத்தின் அடிப்பகுதியை இனம்புரியாத கரங்கள் மென்மையாக வருடுவதை உணர முடியும், இந்த உணர்வுகளால் இணைக்கப்பட்ட ஒரு வலைதான் இன்றளவும் கிராமங்களின் புனிதத்தன்மையையும் யதார்த்தத்தையும் இந்த நவீன யுகத்திலும் உயிர்ப்பித்து வைத்திருக்கிறது,
வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு மேலே சொன்ன கருத்து பொருந்தும் என்றhல் இந்தியாவின் வௌ;வேறு நகரங்களில் பிழைப்பு தேடிச்சென்று ஆங்காங்கே வாழ்ந்துகொண்டிருப்பவர்களுக்கு வேறெhரு விதமான வேதனை. நம் கண்ணெதிரே நமது கிராமங்கள் முன்னேறி வருவதை வெறுமனே பார்த்துக்கொண்டு மட்டுமே இருக்க முடிகிற வேதனை அவர்களுக்கு. கிராமத்தின் எளிமை. அன்பு. கரிசனம். உறவுகளோடு தங்களைப் பிணைத்துக்கொண்டு கிராமத்தின் வளர்ச்சியுடன் சேர்ந்தே வளர முடியாமல் போய்விட்டதே என்ற ஆதங்கம் ஒருபுறம்,
அதேபோல நமது சொந்த கிராமங்களுக்குச் செல்லும்போது தற்போது நகர்ப்புறங்களில் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கும் நவீன வசதிகள். அத்தியாவசியமாகிவிட்ட ஆடம்பரங்கள். நியாயமான அடிப்படை வசதிகள். முன்னேற்றத்திற்குப் பயன்படும் முற்போக்கான மனப்பாங்கு ஆகியவற்றை கிராமங்களில் தேடி ஏமாற்றமடைய வேண்டியதாக உள்ளது, இரண்டுங்கெட்டானாக திரும்பவும் நகரங்களின் கான்கிரீட் காடுகளை நோக்கி கனத்த இதயத்தோடு பேருந்திலோ. விமானத்திலோ. ரயிலிலோ ஏறி உட்கார்ந்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது, இதுதான் இன்னொரு வேதனை,
இது இப்படி இருந்தாலும் நகர்ப்புறங்களில் எதிர்காலத்தில் ;பிறக்க இருக்கும் குழந்தைகளுக்கும் தற்போது வளர்ந்து ஆளாகியிருக்கும் இன்றைய இளையதலைமுறைக்கும் நமது வேர்களைக் குறித்த விபரங்கள் தெரியாமல் போய்விட வாய்ப்பு இருக்கிறது, இந்த வரலாற்றுத்தவறைத்தொடர நாம் அனுமதித்து விடக்கூடாது. எனவேதான் நமது கிராமங்களின் வாழ்க்கை. சடங்குகள். நம்பிக்கைகள். மு்டநம்பிக்கைகள். பழக்கவழக்கங்கள். பழமொழிகள். திருமண முறைகள். தொழில் உட்பட பல்வேறு அம்சங்களையும் எனக்குத் தெரிந்தவரை. தெரிந்தவகையில் முடிந்தவரை இந்த வலைப்பூவில் இடம்பெறச் செய்ய உள்ளேன், தமிழ்கூறு நல்லுலகு இந்த முயற்சிக்கு ஆதரவு தர வேண்டுகிறேன், இதில் இடம்பெறும் படைப்புகள் குறித்து உங்களின் கருத்துக்கள். செய்திகளை அறியத்தாருங்கள்,
என்றென்றும அன்புடன்;.
கா.சு.துரையரசு

செவ்வாய், 1 ஏப்ரல், 2008

vanakkam

நண்பர்களே...
நான் கா.சு.துரையரசு. பத்திரிகையாளர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள காளாஞ்சிபட்டி என்ற குக்கிராமத்தில் பிறந்தவன். இன்று நகரவாசியாக இருந்தாலும் நான் புழங்கிய கிராம வாழ்க்கை இன்னும் நெஞ்சுக்குள்ளேயே பசுமையாக இருக்கிறது. அதனைப் பகிர்வதற்கென்றே இந்த வலைப்பூ...

சமூகம் மாறவேண்டுமானால், சமூகவியலும் மாறவேண்டும்!

  நான் சமூகவியலில் முதுகலைப்பட்டப் படிப்பை அண்மையில் படித்து நிறைவு செய்தததை நண்பர்கள் அறிவீர்கள். எனது தமிழ்நாடு திறந்த நிலைப்பல்கலைக் கழகம...