சாலைப்புதூர் பள்ளியில் எங்களுக்கு கிடைத்த தின்பண்டங்கள் குறித்துக் கடந்த பதிவில் சொல்லியிருந்தேன் அல்லவா! இந்தப் பதிவில் முழுக்க முழுக்கப் பட்டிக்காடான காளாஞ்சிபட்டியில் எனக்கு வேறுவிதமான இயற்கைத் தின்பண்டங்கள் கிடைத்தன. அங்கு உள்ள ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளியில் கொஞ்சநாட்கள்தான் படித்தேன். 3ம் வகுப்பு மட்டும். அப்போது விதம் விதமான பொருட்கள் எங்களுக்கு தின்னக் கிடைத்தன. அதில் குறிப்பிட வேண்டியது புளியம்பிஞ்சு. பூ பூத்த புளியமரம் ஒரு விதமான மணத்தை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும். அந்தப் பூக்களையும் அப்படியே சாப்பிடலாம். லேசான புளிப்புச்சுவையும் துவர்ப்புச் சுவையும் அடங்கியது புளியம்பூ. சிலருக்குத்தான் அந்தச் சுவை பிடிக்கும். ஆனால் அனைவரையும் கவர்வது புளியம்பிஞ்சுதான். சுண்டுவிரலில் கால்பகுதிக்கும் குறைவான மெலிய பிஞ்சுகள் லேசாக உடைத்தாலே உடைந்துவிடும். அவை அட்டகாசமான சுவையுடன் இருக்கும். நறுக் நறுக்கென்று சாப்பிடுவதும் நல்ல அனுபவம்தான். அவற்றைச் சிறிது உப்பு, மிளகாய்ப்பொடியுடன் தொட்டுக்கொண்டு தின்போம். சட்னியின் சுவையோடு இருக்கும். விழுது விழுதாக சட்னி செய்து சாப்பிடுபவர்களும் உண்டு. அவ